”விமானத்தில் பறப்பவர்களுக்கு வீழ்ந்து கிடக்கும் மக்கள் பற்றி என்ன தெரியும்?” - விஜயகாந்த் பேச்சு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், ஜெயலலிதாவை பற்றி கடுமையாக விமர்சித்து தாக்கி உள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக வுக்கு பொள்ளாச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளரை அறிவிக்காமலே தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை இங்கு பிரசாரம் செய்தார். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் விஜயகாந்த் பேசியபோது,

" பொள்ளாச்சி விவசாயிகள் நிறைந்த பகுதி. விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விலைவாசி அதிகளவு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால், அம்மா குடிநீர் என்று அதற்கு ஒரு விலைபோட்டு கொடுக்கின்றனர். எங்கு பார்த்தாலும் அம்மா என்று பெயர் வைத்து கொண்டு புகழ் பரப்புகின்றனர். ஹெலிகாப்டரில், விமானத்தில் வருபவர்களுக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியாது.
நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்சம், ஊழல் என்று ஆட்சி செய்வோர்களை அகற்ற வேண்டும். பாஜவை மதவாத கட்சி என்று பொய் பிரசாரம் செய்கின்றனர். வாஜ்பாய் ஆட்சியில்தான், இந்திய ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்தார். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தங்கநாற்கர சாலை கொண்டு வந்ததும் வாஜ்பாய் ஆட்சியில்தான். மக்கள் எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவன். தமிழகத்தில் ஊழலை ஒழிக்க போராடுகிறேன். அதுபோல் நாட்டில் உள்ள ஊழலை நரேந்திரமோடி ஒழிப்பார். நம்நாட்டிற்கு மாற்றம் வர பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து மாற்றத்தை காணவேண்டும். நான் கட்சி ஆரம்பித்து 10ஆண்டாகிறது. இதுவரை மக்களுக்காக தனியாக நின்று போராடுகிறேன். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடம்தான் உள்ளது. 2016 இல் தமிழகத்தில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்" என்று கூறினார் அவர்.












Click it and Unblock the Notifications