வர்றப்ப வடை கொடுத்தாங்க.. வேன் குலுங்குச்சா... கீழே விழுந்துருச்சு.. விஜயகாந்த் கவலை!
உளுந்தூர்ப்பேட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது மோசமான சாலையால் தான் வடை சாப்பிட முடியாமல் போன சோகத்தைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருவோர் மூளை கலங்க நல்ல விஷயங்களை கற்றுச் செல்கிறார்களோ என்னவோ, ஆனால் வயிறு குலுங்கச் சிரித்துச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு கலகலவென பேசி வருகிறார் விஜயகாந்த்.

இப்படித்தான் தான் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பி. குளத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்து வேனில் இருந்தபடி பேசினார் விஜயகாந்த்.
அவர் பேசும்போது, நான் வேனில் வரும் போது எனக்கு சாப்பிட வடை கொடுத்தார்கள். ரோட்டில் வேன் வரும் போது குலுங்கியதால் அந்த வடை கீழே விழுந்து விட்டது. அந்த அளவிற்கு இந்த ரோடு படுமோசமாக இருக்கிறது.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்த தொகுதியில் எங்கும் சரியாக ரோடு போடவில்லை. நான் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ரோடு போட்டு தருவேன்.
இங்கே விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை ரூ.500 கோடி அளவிற்கு பாக்கி உள்ளதாக கேள்விப்பட்டேன். தேமுதிக ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும். உங்களுக்கு ரூ.500 கோடி வேண்டுமா என்று கேட்டார். உடனே மக்கள் வேண்டும் வேண்டும் என்று கூறினார்கள்.
முன்னதாக வேனுக்குள் இருந்தவாறு பேசிய விஜயகாந்த்தை சிலர் வெளியே வந்து பேசுமாறு அழைத்தனர். அதைக் கேட்டு முகம் மாறிய விஜயகாந்த், நான் ஜெயலலிதா அல்ல. என்னால் வேன் மீது ஏறியும் பேச முடியும். வேன் உள்ளே அமர்ந்தும் பேச முடியும் என்றார் சற்றே கோபமாக.












Click it and Unblock the Notifications