4 சீட்டுக்காக 40 நாட்கள் போராடுவதா.. திமுக கூட்டணியில் இணைவதே விஜயகாந்த்துக்கு நல்லது: பழ.கருப்பையா
சென்னை: 4 சீட்டுக்காக 40 நாட்கள் போராடுவது சரியல்ல என்பதை புரிந்து கொண்டு, திமுக கூட்டணியில் விஜயகாந்த்தும், இன்ன பிற கட்சிகளும் சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசை வீழ்த்த வேண்டும் என்று அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த பழ.கருப்பையா கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டின்பேரில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர், தான் வகித்து வந்த சென்னை, துறைமுகம் தொகுதி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதன்பிறகு அதிமுக குறித்தும், அதன் தலைமையால், அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் நடத்தப்படும்விதம் குறித்தும் கருப்பையா காரசார பேட்டிகள் கொடுத்து வந்தார். இருப்பினும் எந்த ஒரு கட்சியிலும் அவர் தன்னை இன்னமும் இணைத்துக்கொள்ளவில்லை.
ஒன்று சேருங்கள்
இந்நிலையில், விஜயகாந்த்தின் கூட்டணி நிலைப்பாடு இழுபறியாக இருப்பது குறித்து பழ.கருப்பையா பேட்டியொன்றில் சாடியுள்ளார். ஜெயலலிதாவை வீழ்த்த கருணாநிதி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா வீழ்ச்சியே நோக்கம்
என்னுடைய ஒரே குறிக்கோள் ஜெயலலிதா ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில், 1967ம் ஆண்டு இருந்த நெருக்கடிநிலை, தற்போது தமிழ் நாட்டில் இருக்கிறது. ஜெயலலிதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தனித்து நின்றால் ஜெயலலிதாதான் வெற்றி பெறுவார். மற்ற எல்லா கட்சிகளும் தோல்வியடைந்துவிடும்.
மக்கள் நல கூட்டணி
மக்கள் நலக்கூட்டணி உள்பட தனித்து நிற்கும் கட்சிகள் வாக்குகளை பிரிப்பதால் அது ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும். எனவே அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் பொதுவான கொள்கையை உருவாக்கி அதன் அடிப்படையில் கூட்டணியை உருவாக்க வேண்டும்.
சீட் சண்டை வேண்டாம்
4 சீட்டோ, 10 சீட்டோ அதிமாக கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியில் சேராமல் போனால் அதனால் பாதிப்பு என்னவோ,
எதிர்க்கட்சிகளுக்குத்தான். விஜயகாந்த் தவறான முடிவெடுத்தால் முதல் பாதிப்பு அவருக்குத் தான் வரும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
பட்டபாடு மறந்துபோச்சா
ஏற்கனவே விஜயகாந்த் அதிமுக கட்சியால் பாதிக்கப்பட்டவர். சட்டசபைக்கே செல்ல முடியாத அளவுக்கு விஜயகாந்த்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் 8 பேர் அதிமுகவுக்கு சென்ற சம்பவம் பிற கட்சியினருக்கு ஒரு பாடமாகும். எனவே இந்த முறை வாக்குகள் சிதறாமல் இருக்க விஜயகாந்த் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
40 நாள் போராடுவதா
ஜெயலலிதா வெற்றி பெற்றால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல, விஜயகாந்துக்குதான் என்பதை அவர் உணர வேண்டும். எனவே எதிர் அணி வலுப்பட வேண்டும். 4 சீட் கூடுதல் வேண்டும் என்பதற்காக 40 நாள் போராடுவது சரியாகாது. இவ்வாறு பழ.கருப்பையா கூறியுள்ளார்.