தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை விரைவில் தேவை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'சென்னை மாநகரில் ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறையும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல இடங்களில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் அவலநிலை உள்ளது.

அதிலும் வழக்கமாக விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பாதியளவே விநியோகிப்பதாகவும், அதிலும் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் லாரிகளின் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரைக் கூட ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்வதாக மக்கள் கூறுகின்றனர்.
ஏழை, எளிய மக்கள் லாரிகளிலும், வேன்களிலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதால், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை தண்ணீருக்காக செலவு செய்யும் நிலை தமிழகத்தில் உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கேன் குடிநீர் தேவை சுமார் ஒரு கோடி லிட்டரிலிருந்து, ஒரு கோடியே ஐம்பது லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளதென்றும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சுமார் 400 க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடி நீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், தற்போது அதன் எண்ணிக்கை சுமார் 600யை தாண்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நான்காண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களையும், புள்ளி விவரங்களையும் கூறி, பணிஆணை வழங்கப்பட்டுள்ளது, பணிகள் நடைபெறுகிறது, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேம்படுத்தப்பட்டுள்ளது என வாய்ஜாலம் காட்டி அனைவரையும் ஏமாளியாக்க பார்க்கிறது அ.தி.மு.க. அரசு.
சென்னைக்கு குடிநீர் வழங்கும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு மட்டும் 1220 கோடி ரூபாய் கடன் உள்ளது. அப்படியானால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கும் வாரியத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கும்?
இந்தநிலையில் புதிய குடிநீர் திட்டங்களை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தேவையான நிதி ஆதாரம் எங்கே இருந்து வரும்? இத்துறையின் அமைச்சர் இதற்கு பதிலளிப்பாரா?
2013 ஏப்ரல் 16 ஆம் தேதி 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நான்காண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்றார். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேலாகி தற்போதுதான் ஒப்புதலே வழங்கப் பட்டுள்ளது. அதேபோல் சென்னை அருகே உள்ள போரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் என்னவானதென்றே தெரியவில்லை. மேலும் அன்றைய தினமே எட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் நிலையும் அதோகதியாகி விட்டது.
எனவே தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை உண்மையாகவே தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications