அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், நிருபர்களுக்கும் நன்றி... விஜயகாந்த்
சென்னை: டெல்லிக்கு எனது தலைமையில் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவில் தங்களது பிரதிநிதிகளை இடம் பெறச் செய்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும், நிருபர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் விவசாய பெருமக்களையும், குடிநீர் பற்றாக்குறையால் பல மாவட்ட மக்களையும் பாதிக்கும் மேகேதாது, முல்லை பெரியாறு, அணை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போன்றவற்றோடு நீண்டநெடுங்காலமாக தீர்க்ககபடாத தமிழக மீனவர் பிரச்சனையோடு சமீபத்தில் ஆந்திர அரசால் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட 20 தமிழர்கள் பிரச்சனை என இன்றைய தமிழகத்தின் தலையாய ஐந்து பிரச்சனைகளில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தும் பொருட்டு பிரதமரை சந்திக்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டேன்.
ஒரு நாள் அவகாசமே இருந்த போதும் எனது அழைப்பை ஏற்று டெல்லி வந்து கலந்துகொள்ள தங்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைத்த திமுக தலைவர் கலைஞர், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்கு என் உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, கொங்கு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்த திராவிட கழக தலைவர் மரியாதைக்குரிய கி.வீரமணி, முழு ஒத்துழைப்பு நல்கிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், நிருபர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.