நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும், "டிடி" மூலமாக தர வேண்டும்.. விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள தொகை மிகச் சொற்பமேயாகும். வீடுகளை இழந்து, அவர்களின் உடைமைகளை இழந்து மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாகி, அவர்களின் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கிறார்கள். வெள்ளம் வடிந்த பகுதிகள் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், கிரைண்டர், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் உடைகள் என அனைத்து பொருட்களும் ஒவ்வொரு பகுதியிலும், மலைப்போல் குவிந்துள்ளன. இதைப்பார்த்த பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரத்தில் நிவாரணத் தொகை அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகளை இழந்து தவிப்பவர்களுக்கு இந்த தொகை மிகவும் குறைவானதாகும். எனவே பாதிப்பிற்கு ஏற்ற வகையில் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் காபிக்கு சர்க்கரை கேட்கவில்லை, குடிக்கின்ற கூழுக்கு உப்புதான் கேட்கிறார்கள். அதைத் தருவதற்கு கூட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமில்லையா? அதிமுக அரசு நிவாரணத் தொகையை அதிகப்படுத்தி உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அவர்களது பெயரில் வரைவோலை (DD) வழங்கி அதன்மூலம் அவர்கள் பணம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். இப்படி செய்வதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி, ஆளும் கட்சியின் முறைகேடுகளின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக நிவாரணத்தொகை போய்ச்சேரும் என்பதில் ஐயமில்லை. எனவே அதிமுக அரசு இதில் மெத்தனம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் நிவாரணத்தொகையை வழங்கிடவேண்டும்.
இன்று (07.12.2015) நான் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது, உப்பாறு ஓடை மற்றும் வைப்பாறு பகுதியில்தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அதிமுக, திமுக இரண்டு ஆட்சியிலும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு கடற்கரை பகுதியில் தாதுமணல் அள்ளுவதற்கு உரிமம் கொடுத்ததால், வைப்பாற்றிலிருந்து கடலுக்கு செல்லும் நீர்வழிச்சாலைகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. அதனால் மழை வெள்ளம் செல்லமுடியாமல், வைப்பாற்றின் பல பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளநீர் பல ஊர்களுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் போன்ற நீர்நிலைகள் அதிமுக, திமுக ஆகிய இரண்டு ஆட்சியிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இதுபோன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளை, விருப்பு, வெறுப்பின்றி மீட்டெடுத்தால்தான் வரும் காலங்களில் இதுபோன்ற பேரழிவுகளை தடுக்கமுடியும் என்பதை மனதில்கொண்டு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications