மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் முதல்வருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தங்களது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் போராட்டங்களை நடத்தி வருகிறன்றனர்.
அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் ஒதுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போராடி வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை நேரிடையாக முதல்வரை சந்தித்து கொடுப்பதற்கு அவர்கள் கேட்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இந்த ஆட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தபின், அமைச்சருடனான சந்திப்பில் எங்களுக்கு எந்த உறுதியும் தரவில்லை, நம்பிக்கை அளிப்பதாகவும் இல்லை. நாங்கள் கேட்பதெல்லாம் ஒருமுறை முதல்வரை சந்திக்க வேண்டும் என்பதுதான் என்று பேட்டி கொடுத்தார்கள்.
அடுத்த நாள் பத்திரிகையில் இந்த மாற்றுத் திறனாளிகளை காவல்துறை வாகனங்களில் ஏற்றி, சென்னைக்கு வெளியே சுடுகாட்டுக்கு பக்கத்திலும், மதுராந்தகத்திலும் இறக்கி விடப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அதோடு போராடும் மாற்றுத் திறனாளிகளை காவல்துறை கையாளுகிற விதமும் சற்று கடுமையாகவே தொலைக்காட்சியில் தெரிகிறது.
இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதுதான் மனிதாபிமானம் ஆகும். மக்களுக்கு சேவை செய்வதுதானே ஒரு அரசின் கடமை. அதற்கு மாறாக தங்கள் நியாயத்திற்காக போராடுகிறவர்களை மிரட்டி பணிய வைக்க நினைப்பது என்ன நியாயம்?.
எனவே, மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை இந்த அரசு மனிதாபிமானத்தோடு அணுகி, போராடுகிற மாற்றுத் திறனாளிகளை முதலமைச்சர் சந்தித்து, அவர்கள் கேட்பதில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications