திமுகவுக்கு 'நோ' சொன்ன பிரேமலதா... பாஜகவுக்கு 'நோ' சொன்ன தேமுதிக நிர்வாகிகள்...
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவுடனான கூட்டணியே வேண்டாம் என தொடக்கம் முதலே உறுதியாக இருந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணியே கூடாது; ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியாது என்பதில் பிடிவாதம் காட்டி வருகின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.
லோக்சபா தேர்தலின் போது திமுக- தேமுதிக கூட்டணி உருவாகும் சூழல் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணிக்குப் போனார் விஜய்காந்த். இதனால் 'சோலோவாக' அதிமுக 37 தொகுதிகளை அள்ளியது.
சட்டசபை தேர்தலிலும் இப்படி ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்தது. இதற்காக பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனாலும் தேமுதிக, நிபந்தனைகளின் பெயரால் இழுபறியாக இழுத்துக் கொண்டே இருந்தது.
இதற்கு காரணமே திமுகவுடனான கூட்டணியை விஜயகாந்த் மனைவி பிரேமலதா விரும்பவில்லை என்பதுதான். அண்மையில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டில் அதிமுக, திமுக இரண்டையும் ஊழல் கட்சிகள் என வறுத்தெடுத்துவிட்டார் பிரேமலதா. ஆனால், விஜய்காந்த் திமுகவை விமர்சிக்கவே இல்லை.
அவரைப் பொறுத்தவரையில் பாஜகவுடன் கூட்டணிக்குப் போனால்தான் "ஆதாயம்" என்பதில் திடமாக நம்பினார். இது ஒருபுறம் இருக்க, தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகளோ பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது; தேர்தலில் ஜெயிக்க வேண்டுமானால் திமுகவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி என பிரேமலதா சொல்ல; நிர்வாகிகளோ திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என கருத்து தெரிவிக்க என்னதான் முடிவெடுப்பது என திக்கு தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.
இத்தனை பஞ்சாயத்துகளுக்கு நடுவில்தான் தற்போது திமுகவின் 59 தொகுதிகள் 'ஆஃபரை' விஜயகாந்த் ஏற்றுக் கொண்டு திமுக கூட்டணிக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்...
சத்திய சோதனை!