சோ-வின் சூழ்ச்சியில் இம்முறை விஜய்காந்த் சிக்க மாட்டார்: மாநாட்டில் தேமுதிக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு
சென்னை: இன்று நடந்த தேமுதிகவின் மாநாட்டில், முண்டாசு கட்டாத பாரதி எங்கள் அண்ணி என்று பிரேமலதாவையும், உடையிலே காமராஜர்... உருவத்தில் அண்ணா உள்ளத்தில் எம்.ஜி.ஆர் உணர்விலே பிரபாகரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் என்று விஜயகாந்தையும் புகழ்ந்து தள்ளினார் தேமுதிக எம்.எல்.ஏ பார்த்த சாரதி.
மேலும் கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 'சோ'வின் சூழ்ச்சியில் சிக்கியதாலேயே அதிமுக உடன் கூட்டணி அமைக்க நேரிட்டதாக கூறிய பார்த்த சாரதி, இம்முறை அது போன்ற ஒரு சூழ்ச்சியில் சிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் களம் படு பரபரப்பாக இருக்க, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு வேடலில் நடைபெற்றது. கேப்டன் டிவியின் புள்ளி விபரப்படி பல லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்திருக்க தேமுதிகவின் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களின் வீர உரையை தொண்டர்கள் மத்தியில் கொட்டி குவித்தார்கள்.
கடந்த முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்ததே கேப்டன் போட்ட பிச்சைதான் என்று பல தேமுதிக நிர்வாகிகளும் பேசினர். விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதி பேசுகையில்,
கடந்த சட்டசபை தேர்தலில் அவசரப்பட்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டார் கேப்டன் என்றார்.கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்திய துக்ளக் ஆசிரியர் 'சோ'வையும் ஒரு தாக்கு தாக்கினார். சோ-வின் சூழ்ச்சியால்தான் கடந்த முறை அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்ல நேரிட்டது. இந்த முறையும் சோ ஏதாவது சூழ்ச்சி செய்வார். ஆனால், அதில் எங்கள் கேப்டன் சிக்க மாட்டார் என்றார்.