மன உறுதியுடன் தேர்வை எழுதுங்கள்... 10, +2 சிபிஎஸ்இ மாணவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் இன்று சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.இ படிக்கும் மாணவ, மாணவிகளான தங்களுக்கு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சிறந்த முறையிலும் தேர்வு எழுதி வெற்றிபெற்று மாபெரும் சாதனை புரிய வேண்டுமென தேர்வு எழுதச் செல்லும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
2016 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய உள்ளது. அதைப்போல தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் வாழ்வில் இந்த தேர்வு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்கையின் வெற்றிப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தருணம் இந்த தேர்வுகாலம் என்பதால், தாங்கள் அனைவரும் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படியும் மாணவ, மாணவிகள் தேர்வுக்காக தயார் நிலையில் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனவே மாணவ, மாணவிகள் மனஉறுதியுடனும், மிகுந்த கவனத்துடனும் தேர்வுகளை சிறந்த முறையில் எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.