தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி அகலட்டும்... இந்த வருஷமும் விஜயகாந்த் அதே புத்தாண்டு சபதம்!
சென்னை: தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி அகலட்டும்..நல்லாட்சி அமையட்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த புத்தாண்டு செய்தியிலும், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் ஆட்சியை அகற்றி, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைய நாம் அனைவரும் இந்த நன்நாளில் சூளுரை ஏற்போம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு விஜயகாந்த் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியிலும் அதையே வலியுறுத்தியுள்ளார். விஜயகாந்த் வெளியிட்ட புத்தாண்டு செய்தி:
புதிய வாய்ப்புகளும், சம உரிமைகளும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படுமென ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் மக்கள் நம்பிக்கையோடு புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகிறோம்.
எந்தாண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகத்தின் தலைநகரே சிதைந்துபோனது. பல மாவட்டங்களில் பொதுமக்களின் உடைமைகள், தொழில், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இன்று (01.01.2016) புத்தாண்டு பிறக்கிறது.
மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மனதில்கொண்டு புத்தாண்டை ஆடம்பரமாக கொண்டாடுகின்ற பல அமைப்புகள், விடுதிகள் போன்றவைகளெல்லாம் அதை ரத்து செய்துள்ளன.
எனவே புத்தாண்டு தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடாமல், இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனிமேல் நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்கின்ற தொலைநோக்குச் சிந்தனையோடு, புதியதாய் பிறக்கும் 2016 புத்தாண்டை வரவேற்று, மிகுந்த மகிழ்ச்சியோடு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில், இன்றிலிருந்தாவது ஒளி வெள்ளம் ஏற்படட்டும். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகலட்டும், தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையட்டும்.
2016ல் தமிழகத்தில் அமையும் புதிய ஆட்சியில், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.