தமிழக தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு... உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு
சென்னை : தமிழக தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது...
தமிழக தலைமை தகவல் ஆணையராக கே.ராமானுஜம், தகவல் ஆணையர்களாக ஆர்.தட்சிணாமூர்த்தி, ஜி.முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது.
தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்வதற்கான குழுக் கூட்டம் நடத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். அக்கூட்டம் ஆகஸ்ட் 6-ம் தேதி பகல் 12 மணிக்கு நடக்கும் என்று பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் ஆகஸ்ட் 1-ம் தேதி அனுப்பிய கடிதத்தை எனது தனிச் செயலாளர் மறுநாள் பெற்றுக்கொண்டார்.
அதில், அக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான எனது வசதி பற்றியோ, எனது ஒப்புதலோ கோரப்படவில்லை. தேர்வுக் குழுவின் 3-வது உறுப்பினர் யார் என்றும் குறிப்பிடப்படவில்லை. இந்த பதவிக்கு யார் யார் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் வேண்டுமென்றே தெரிவிக்கப்படவில்லை.
இக்குழுக் கூட்டத்தை அவசர கதியில் ரகசியமாக நடத்தியுள்ளனர். ஆளுங்கட்சிக்கும், அரசுக்கும் செய்த சேவைக்காக அனுகூலம் செய்யும் வகையில் மேற்கண்ட 3 பேரையும் நியமித்துள்ளனர்.
எனவே, அவர்களது நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கக் கூடாது. இவர்களை தகவல் ஆணையர்களாக செயல்பட அனுமதித்தால் பொதுமக்களுக்கு பெரும் தீங்கு ஏற்படும். அவர்கள் எந்த தகுதி அடிப்படையில் இப்பதவியில் நீடிக்கிறார்கள் என்று நீதிமன்றம் கோர வேண்டும். அத்துடன் மூன்று பேரும் செயல்பட தடை விதிக்க வேண்டும். அவர்களது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
ஏற்கெனவே தலைமை தகவல் ஆணையர், தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மனுவுக்கு 8 வாரத்தில் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.