கோயில் கும்பாபிஷேகம் செய்ய அனுமதி கேட்டு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊர் மக்கள்
நெல்லை: சங்கரன்கோவில் அருகே கோயில் கும்பாபிஷேகம் நடத்தாமல் மாவட்ட நிர்வாகம் தூங்கி வருவதால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் உடையார் தலைமையில் உடம்பன்குளம் கிராம மக்கள் வேன்களில் திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் "சங்கரன்கோவில் அடுத்துள்ள உடும்பன்குளம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைத்து சமுதாய மக்களும் இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து கோபாலகிருஷ்ணன் சாமி கோவிலை நிறுவினர். கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் புறம்போக்கு நிலத்தில் கோயில் அமைந்துள்ளதாக கூறி சிலர் கும்பாபிஷேகம் நடத்த விடாமல் தடுத்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த காரணத்தால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கோயில் கும்பாபிஷேகம் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிடாமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு கும்பாபிஷேகம் நடக்க உதவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகையால் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக இருந்தது.












Click it and Unblock the Notifications