காட்டு பன்றியை சமைத்து சாப்பிட்ட கும்பல்- வனத்துறையினர் வந்ததால் தப்பி ஓட்டம்
நெல்லை: நெல்லை அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய கும்பல் அதை சமைத்து சாப்பிட்ட போது வனத்துறையினர் வந்ததால் சாப்பாட்டை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தது.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தை கடமான், யானை, கரடி, செந்நாய் உள்ளிட்ட பல வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடுமையான குளி்ர் நிலவி வருவதால் வன விலங்குகள் மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ளன.
இவை ஊருக்குள் புகுந்து வாழை, நெற்பயிர்களை சேதப்படுத்துவதுடன் பனை, தென்னை, முந்திரி மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்கின்றன. சிதம்பரபுரம், திருக்குறுக்குடி பகுதியில் மூன்று விவசாயிகளை காட்டு பன்றிகள் தாக்கின.
இதில் ஊருக்குள் புகும் கடமான்களை சிலர் வேட்டையாடுவதாக புகார் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள். இதை உறுதி படுத்தும் வகையில் திருக்குறுங்குடி காட்டு பகுதியில் பன்றியை வேட்டையாடிய கும்பல் வனத்துறையினர் வந்ததை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது தெரிய வந்துள்ளது.
திருகுறுங்குடி அருகேயுள்ள லெவஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் காட்டு பன்றியை வேட்டையாடி துண்டு துண்டாக வெட்டி கறி சமைத்துள்ளனர்.

இதுகுறித்து திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வன சரகர் நடராஜன், வனவர் அப்துல் ரகுமான் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்றனர். வனத்துறையினரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓடியது.
வனத்துறையினர் சாமுவேல் வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு சமைக்க தயார் நிலையில் இருந்த பன்றி இறைச்சியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்ட கும்பலை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications