பாவம் மக்கள்.... தாம்பூலத் தட்டில் கோரிக்கை மனுவை வைத்து கலெக்டரிடம் கொடுத்த அவலம்!
நாமக்கல்: வெற்றிலை பாக்கு தாம்பூல தட்டுடன் கோரிக்கை மனுவை வைத்து கலெக்டரிடம் கொடுத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிக்கை வைத்த மலைவாழ் மக்களால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் கீழுர், மேலூர், கெடமலை மற்றும் போதமலை உள்ளது. இங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மலைப் பகுதிகளில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அதே போல நியாய விலைக் கடை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றும் கூறி இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை என்றும் மலைவாழ் மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், இன்று போதமலையைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் உள்ளிட்டோர் வெற்றிலை பாக்கு மற்றும் தேங்காய் வாழைப் பழம் என தாம்பூல தட்டுடனும், மா, சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகள் அடங்கிய தட்டுடனும் அதில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வைத்து மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தியை சந்தித்து போதமலைக்கு வருமாறு அழைக்க வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க இப்படி பாக்கு வெற்றிலை வைத்து அழைக்க வேண்டிய நிலை இருப்பது வேதனையானதுதான்..!












Click it and Unblock the Notifications