தண்டவாளத்தில் நின்ற லாரி.. குடங்களைக் காட்டி ரயிலை நிறுத்திய புத்திசாலிப் பொதுமக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கி நின்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயிலை, பொதுமக்கள் காலிக் குடங்களைத் தூக்கிக் காட்டி நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்செந்தூர் சாலையில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழ்பகுதியில் குடியிருப்புகளும் உப்பளங்களும் உள்ளன.

இதில் நேற்று பிற்பகல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிகொண்டு சரக்கு ரயில் தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்றது, அப்போது தூத்துக்குடி பெரியசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள உப்பளங்களில் இருந்து உப்பு பண்டல்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு அப்பகுதியில் அமைந்துள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது லாரியின் பின்சக்கர அச்சு முறிந்து ரயில்வே தண்டவாளத்தின் மீது லாரி நின்றுவிட்டது.
இதனை கண்ட பெரியசாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் இருந்த காலி குடங்களை எடுத்து வந்து, அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலை நோக்கி காட்டினர். இதைப் பார்த்த சரக்கு ரயிலின் என்ஜின் டிரைவர் ரயிலை முன்கூட்டியே நிறுத்தி விட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதன் பி்ன்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு லாரி இழுத்து செல்லப்பட்டது. இதனால் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக சரக்கு ரயில் சென்றது.












Click it and Unblock the Notifications