உண்மையிலேயே பெரிய்ய கலெக்டர்தான்... மூதாட்டியின் பிரச்சினைக்கு உதவிக்கரம் நீட்டிய விருதுநகர் கலெக்டர
விருதுநகர்: இவர் பெரிய கலெக்டர் என்று சிலர் கிண்டலாக கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் விருதுநகர் கலெக்டர் உண்மையிலேயே மிகப் பெரிய கலெக்டர்தான். அவர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் காளி. இவரது மனைவி ஜக்கம்மாள் (60). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான ஒன்னே முக்கால் ஏக்கர் நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்ய அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் ஒப்பந்தம் செய்து ரூ.1 லட்சம் முன் பணமாக பெற்றுக் கொண்டனர்.

ஒப்பந்தம் செய்த சில நாட்களில் காளி இறந்து விட்டார். இதையடுத்து ஜக்கம்மாள் நில விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர் கேட்டுக் கொண்டபடி முன் பணம் மற்றும் பத்திர செலவிற்காக ரூ.1.5 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டார். ஆனாலும் ஒப்பந்தம் செய்து கொண்ட நபர் அந்த நிலத்தை தனக்குத் தான் விற்பனை செய்ய வேண்டும் என ஜக்கம்மாளை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த ஜக்கம்மாள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலெக்டர் ராஜாராமனிடம் சென்று தனது பிரச்சினையைக் கூறி மனுவையும் அளித்தார். மனுவை வாங்கிப் பார்த்த கலெக்டர் ராஜாராமன் டக்கென எழுந்தார். பின்னர் ஜக்கம்மாளை கூட்டிக் கொண்டு அதே வளாகத்தில் இருந்த எஸ்.பி. அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.
மூதாட்டியுடன் கலெக்டர் சாதாரணமாக நடந்து போவதைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். நேராக எஸ்.பி. மகேஸ்வரனிடம் சென்ற கலெக்டர் ராஜாராமன், ஜக்கம்மாளை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்து அவரது பிரச்சினையையும் கூறி, மனுவையும் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இவருக்கு நிவாரணம் தேடித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
கலெக்டரிடமிருந்து மனுவை வாங்கிய எஸ்.பியும் உடனடியாக நடவடிக்கையில் இறங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஜக்கம்மாளுக்கும் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
இப்ப சொல்லுங்க இவர் "பெரிய்ய" கலெக்டர்தானே!












Click it and Unblock the Notifications