நட்சத்திர கிரிக்கெட்: ரஜினி, கமல் பங்கேற்பதாக விஷால் தகவல் !
சென்னை: தென் இந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதிக்காக ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகம் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது, கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது..
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்ட முதற்கட்ட நிதி திரட்ட வரும் ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் ரஜினி, கமல் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரையுலகம் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் குழுக்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் சங்கத்தின் பழைய கணக்கு வழக்குகள் இன்னும் சரிவர ஒப்படைக்கப்படவில்லை. இரண்டு வருட கணக்குகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் கூறினார்.