விஷாலை தாக்கவில்லை, அன்பு மிகுதியால் கத்திக் கொண்டனர் - சரத் அணி ராம்கி
சென்னை: நடிகர் சங்க தேர்தல் நடந்த வாக்குச்சாவடியில் விஷாலை யாரும் தாக்கவில்லை என்று நடிகர் ராம்கி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் இன்று நடந்தது. நடிகர், நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், சரத்குமார் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் 12 மணி அளவில் வாக்குச்சாவடியில் விஷால் மற்றும் சரத்குமார் அணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விஷால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தள்ளுமுள்ளுவில் சிக்கி விஷால் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து சரத்குமார் அணியின் ஆதரவாளரான நடிகர் ராம்கி கூறுகையில்,
வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் தாக்கப்பட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. அவரை யாரும் தாக்கவில்லை. அங்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தேர்தல் முறைகேடுகள் இன்றி சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளதால் வெளியாட்கள் யாரும் இங்கு வர முடியாது என்றார்.