விஷ்ணு பிரியா தற்கொலைக்கு காரணமான ஆதாரத்தை நாளை வெளியிடுவேன்: வாட்ஸ் அப்பில் மிரட்டும் யுவராஜ்
நாமக்கல்: டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தன்னிடம் செல்போனில் பேசியதையும், அவரது தற்கொலைக்கான ஆதாரத்தையும் நாளை வெளியிடப் போவதாக தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் யுவராஜ் கூறியுள்ளது வாட்ஸ்-அப்பில் வெளியாகியுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், விஷ்ணு பிரியா தற்கொலை குறித்தும், அது தொடர்பாக நடைபெறும் விசாரணை பற்றியும் யுவராஜ், விமர்சித்து பேசிய பேச்சு வாட்ஸ் அப் மூலம் இரு முறை வெளியானது.

இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரத்தை நாளைய தினம் ( ஞாயிறு) காலை 11 மணிக்கு வெளியிடுவேன் என்று மீண்டும் வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், விஷ்ணு பிரியாவின் தற்கொலை பற்றி மூன்று கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நான் வெளியிடப்போகும் தகவல் முக்கிய ஆதரமாக இருக்கும்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக என்னிடம் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா பேசிய ஆடியோ ஆதாரம் மிகமுக்கியமானது. உயரதிகாரிகள் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தள்ளினார்கள் என்பது ஆடியோ ஆதாரம் உள்ளது. இதனை இப்போது வெளியிடுவதற்கான சரியான நேரம் வந்துள்ளதாக கருதுகிறேன்.
தற்கொலை தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி, நாமக்கல் எஸ்.பி, எடி.எஸ்.பி ஆகியோர் பொய்யான தகவல்களை கூறிவருகின்றனர் முத்துக்குமாரசாமி தற்கொலையில் எப்படி ஆதாரம் கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதேபோல டி.எஸ்.பி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை காலை 11 மணிக்கு உண்மையான ஆதாரத்தை ஊடகங்களில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் யுவராஜ்.












Click it and Unblock the Notifications