டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவில் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றிய விஷ்ணுப்பிரியா கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு விவகாரத்தில் உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பெற்றோர்களும், அவருடன் பணிபுரிந்த காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டினர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தன் மகள் விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்தார். அப்போது, உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து நிர்பந்தம் செய்தனர். இந்த நிலையில், மர்மமான முறையில் என் மகள் மரண மடைந்துள்ளார். அவரது மரணத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் காரணம் என்பதால், சி.பி.சி.ஐ.டி. விசாரணை நேர்மையாக இருக்காது. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம் ஆஜராக உள்ளார். அவர் வெளியூரில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த வழக்கிற்கு இதுவரை அரசு பதில் மனுவோ, விசாரணை குறித்த நிலை அறிக்கையோ தாக்கல் செய்யவில்லை என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் இடைக்கால விசாரணை அறிக்கையை நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளர், டிஜிபி, மற்றும் சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.