லோட்டஸ் டிவியில் செய்திவாசித்த பார்வையற்ற மாணவன்
கோவை: கோவையில் இருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் தொலைக்காட்சியில் பத்து வயது நிரம்பிய பார்வையற்ற சிறுவன் பிரெய்லி முறையில் செய்தி வாசித்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாறைப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் ஸ்ரீ ராமானுஜம்(10). இவர் தொண்டாமுத்தூரில் உள்ள பார்வையற்றோர் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், செய்தி வாசிப்பு தொடர்பாக ஸ்ரீ ராமானுஜத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தத் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் கடந்த 4 மாதங்களாக பயிற்சியளித்து வந்தனர். மே தினத்தன்று 5 மணிக்கு அந்தத் தொலைக்காட்சியில் ஸ்ரீ ராமானுஜம் வாசித்த செய்தி ஒளிபரப்பானது.

தொலைக்காட்சியில் செய்தி வாசித்தது பற்றிய தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சிறுவன் ராமானுஜம், முதன் முதலில் செய்தி வாசிக்கும் போது லேசாக பயம் இருந்தது. தொடர்ந்து நம்பிக்கையோடு செய்து வாசித்தேன் என்று கூறியுள்ளார். அரைமணிநேர செய்தியில் தேசிய செய்திகள், விளையாட்டு செய்திகள், பொழுது போக்கு செய்திகளையும் வாசித்தேன் என்று கூறியுள்ளார் பழனி.
கடந்த மூன்று நாட்களாகவே செய்திப்பிரிவு குழுவினரும், செய்தி நிறுவனமும் இதற்காக தனக்கு கடுமையான பயிற்சி அளித்தனர் என்றும், வெள்ளிக்கிழமை செய்தியை பதிவு செய்தனர் என்றும் ராமானுஜம் தெரிவித்தார்.
ஏற்கனவே லோட்டஸ் டிவியில் பத்மினி பிரகாஷ் என்ற திருநங்கை, செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். தற்போது பார்வையற்ற மாணவன் செய்தி வாசித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் இந்த முயற்சி பற்றி கருத்து கூறியுள்ள லோட்டஸ் டிவியின் நிறுவனர் ஜி.கே.எஸ் செல்வகுமார், தங்கள் தொலைக்காட்சியில் தினசரி 7 மணிக்கு பத்மினி பிரகாஷ் என்ற திருநங்கை செய்தி வாசிப்பதாக கூறினார். இதற்கடுத்த மற்றொரு முயற்சியாகவே பார்வையற்ற சிறுவனை செய்தி வாசிக்க வைத்ததாகவும் தெரிவித்தார். கேமராவை பார்க்கமுடியாத, வெளிச்சம், எதையும் அறியாத சிறுவன் செய்தி வாசித்தது ஒரு சாதனை என்றும் செல்வகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications