நாளை விசாரணைக்கு வருகிறேன்.. வருமான வரித்துறைக்கு ராவ் மகன் விவேக் தகவல்
வருமான வரித்துறை விசாரணைக்கு நாளை காலை 10 மணிக்கு வருவதாக ராமமோகன ராவின் மகன் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை: வருமான வரித்துறை விசாரணைக்கு நாளை காலை 10 மணிக்கு ஆஜராவதாக ராமமோகன ராவின் மகன் விவேக் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரே வருமான வரித்துறை அதிகாரிகளுக்குப் போன் செய்து தகவல் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக விசாரணைக்கு வருமாறு விவேக்குக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் விசாரணைக்கு வருவதைத் தவிர்த்த விவேக், தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது, வீடு, அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த அதிகாரிகள் அவர் பெருமளவில் நிதி முறைகேடுகள், வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக துபாயில் உள்ள ரூ. 1700 கோடி மதிப்பிலான பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலுக்கு இவர் உரிமையாளராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விசாரணைக்கு வராவிட்டால் சிபிஐ மூலம் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை யோசித்து வந்தது. இதையடுத்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட விவேக், நாளை காலை 10 மணிக்கு தவறாமல் விசாறணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார் விவேக்.
இதையடுத்து நாளை அவரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையில் ஒரு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விவேக் தரும் தகவல்களைப் பொறுத்து மேலும் சில ரெய்டுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
முன்னதாக, சென்னை திருவான்மியூர் ஸ்பிரிங்ஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விவேக்கின் சொகுசு பங்களா வீட்டிலும், நந்தனத்தில் உள்ள அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பணம், தங்கம், முதலீடுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications