தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்... ஸ்ரீரங்கத்தில் கனிமொழி பிரச்சாரம்
திருச்சி: தன்மானம் காக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீரங்கத்தில் கனிமொழி எம்.பி. பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணிகண்டம் ஒன்றிய பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய கனிமொழி இரவு ஸ்ரீரங்கத்தில் நிறைவு செய்தார். பிரசாரத்தின் போது கனிமொழி பேசியதாவது:-

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழக அரசே தேர்தல் பணி செய்கிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் குறித்து கவலைப்படாமல் முதலமைச்சர் இங்கு வந்து தேர்தல் ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் தமிழக அரசு இன்னும் பஸ் கட்டணத்தை குறைக்கவில்லை. அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்கள் வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலை வழக்கை விசாரிக்க முடியாமல் காவல் துறை திணறுகிறது. அதனால் அவரது மனைவி நீதிமன்றத்தை நாடி சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளார்.
தமிழ மக்களின் தன்மானத்திற்கு ஒரு அங்கீகாரம் பெற்று தரும் தேர்தல் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல். எனவே அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, வேட்பாளர் ஆனந்த் உள்பட பலர் இருந்தனர்.












Click it and Unblock the Notifications