வருகிறது கலர்புல் வாக்காளர் அடையாள அட்டை.. ஆதார் எண்ணுடன்!
சென்னை: தமிழகத்தில் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த சுமார் 20 லட்சம் பேரில், 86 சதவீதம் பேர் குறித்த விசாரணை முடிந்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 வாரத்தில் 100 சதவீத பணிகள் முடிவடையும். 2015 ஜனவரி 5ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி முதல் புதிய வாக்காளர்கள் 20 லட்சம் பேருக்கும் வண்ண புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கலாம். வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பின்னர் படிப்படியாக தமிழகத்தில் கறுப்பு வெள்ளை அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் வண்ண புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் யோசனை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இதற்காக வாக்காளர்களிடம் ரூ. 25 கட்டணம் பெறப்படும்.
முதல்கட்டமாக, அடையாள அட்டையை தவறவிட்டவர்களுக்கு, புதிய வண்ண அட்டை வழங்கப்படும். பின்னர் படிப்படியாக 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் கறுப்பு வெள்ளை கார்டு வைத்துள்ள சுமார் 5 கோடியே 48 லட்சம் பேருக்கும் வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படி, வண்ண அடையாள அட்டை வழங்கும்போது, ஆதார் கார்டு நம்பரையும், வாக்காளர் அடையாள அட்டையில் பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications