ஒரு வாக்காளர்... 2 இடங்களில் ஓட்டு - கடலூரில் 16,000 பேரை நீக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களில் 56 ஆயிரத்து 512 பேரின் பெயர்களை நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 360 பேரின் பெயர் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் ஆணையம், தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து, இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்கிடவும், வாக்காளரின் பெயர், தந்தை, கணவர் பெயர் மற்றும் முகவரியில் உள்ள பிழைகளைத் திருத்தி பிழையில்லா வாக்காளர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க பெறப்பட்ட 18 ஆயிரத்து 658 மனுக்களை ஆய்வு செய்து 18 ஆயிரத்து 213 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பெயர் நீக்க பெறப்பட்ட 792 மனுக்களை ஆய்வு செய்து 789 பேரின் பெயர் நீக்கப்பட்டது. பிழை திருத்தம் செய்திட பெறப்பட்ட 8,906 மனுக்களை சரி பார்த்து 8,842 நபர்களின் பிழைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்குள் இடமாற்றம் தொடர்பாக பெறப்பட்ட 2,756 படிவங்கள் ஏற்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களின் ஆய்வின்போது, 26 ஆயிரத்து 459 பேர் உரிய படிவம் கொடுக்காமல் இடம் மாறியுள்ளதாலும், 13 ஆயிரத்து 693 பேர் இறந்துள்ள காரணத்தினாலும், ஒரே ஓட்டுச்சாவடியில் இரு இடங்களில் பெயர் உள்ள காரத்தினால் 5,818 பெயர்களும், தொகுதிக்குள் இரு இடங்களில் பெயர் உள்ள காரணத்தினால் 10 ஆயிரத்து 542 பெயர்கள் என மொத்தம் 56 ஆயிரத்து 512 பேரின் பெயர்களை நீக்கல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர்களில், ஒரே ஓட்டுச் சாவடிக்குள் மற்றும் தொகுதிக்குள் இரு இடங்களில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அவர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கள் பெயரை நீக்கம் செய்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் நோக்கில் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
அதேப்போன்றுஇறந்ததாக மற்றும் படிவம் கொடுக்காமல் இடம் பெயர்ந்த காரணத்தினால் நீக்கல் பட்டியலில் இடம் பெற்றுள்ள 40 ஆயிரத்து 152 வாக்காளர்களின் விவரம் குறித்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களால் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது.வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்ட பெயர்கள், நீக்கம் செய்யப்பட உள்ளவர்கள் மற்றும் திருத்தம் செய்யப்பட்டவர்களின் விவரம் இன்று முதல் கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அதில், முறையீடு வந்தால் அதனை நிவர்த்தி செய்து பிழையில்லா இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications