முதலில் ராஜபக்சே மகன்.. இப்போது லைக்கா..விவிஐபிகளின் தலைவராகிறாரா ரஜினி?
ரஜினி தொடங்க இருக்கும் கட்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக விவிஐபிகளின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சென்னை: இந்தியாவின் மொத்த அரசியல் பார்வையையும் ரஜினி தன் பக்கம் இழுத்துவிட்டார். இன்னும் முழுதாக கட்சி பெயர், சின்னம் கூட வெளியிடவில்லை என்றாலும் இப்போதே அவர் கட்சியில் சேர பலர் துடித்துக் கொண்டு இருக்கிறார்.
இவரின் புதிய கட்சியில் சேர்பவரெல்லாம் ஆட்டோக்கார மாணிக்கமாக இருப்பார்கள் என்று நினைத்தால் எல்லோரும் பணக்கார மாணிக் பாட்ஷாவாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவருக்கு விவிஐபிகள் சப்போர்ட் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
முக்கியமாக இவருக்கு இலங்கையில் இருந்து ஆதரவு கரங்கள் அதிகமாக நீண்டு வருகிறது.
|
ராஜபக்சே மகன்
ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டவுடன் முதல் வேலையாக ராஜபக்சே மகன் டிவிட் செய்தார். அதில் ''என் அப்பா ராஜபக்சேவிற்கு விருப்பமான நடிகர்களில் ரஜினியும் ஒருவர். அவர் இப்போது அரசியலுக்கு வந்து இருக்கிறார். இது நல்ல செய்தி. சிவாஜி படத்தில் அவர் மக்களுக்கு நல்லது செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வது போல செல்லாமல் இருந்தால் சந்தோசம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
லைக்கா நிறுவனம்
இதையடுத்து தற்போது லைக்கா நிறுவனத்தில் இருந்தும் இவருக்கு ஆதரவு கரம் நீண்டு உள்ளது. லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய கிளை தலைவராக இருக்கும் ராஜூ மகாலிங்கம் ரஜினியின் கட்சியில் சேர போவதாக அறிவித்துள்ளார். இதற்காக லைக்காவின் தலைவர் பொறுப்பைவிட்டு அவர் சென்று உள்ளார்.
மஹிந்திரா ஆனந்த்
தமிழகம் மட்டும் ஒரு கம்பெனியாக இருந்திருந்தால் அதனுடைய மொத்த பங்கையும் நான் வாங்கி இருப்பேன் என்று கூறியிருக்கிறார் மஹிந்திரா நிறுவன சேர்மேன் ஆனந்த் மஹிந்திரா. ரஜினியின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது என்று கூறுவதற்காக அவர் இப்படி பேசி இருக்கிறார். அந்த அளவிற்கு ரஜினியின் அரசியல் அறிவிப்பு இவரை கவர்ந்து இருக்கிறது.
பெரும் நடிகர்கள்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி குட்டி சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படும் லாரன்ஸ் வரை எல்லோரும் ரஜினிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். உலகிலேயே இல்லாத அளவிற்கு பல பிரபலங்கள் இவர் கட்சியில் 'காவலனாக' சேர இருக்கின்றனர். இதற்கான பல அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.
சர்ச்சை ஆகியது
தற்போது இந்த விஷயம் இன்னொரு வகையில் சர்ச்சை ஆகி இருக்கிறது. ஏற்கனவே லைக்கா நிறுவனத்திற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் நெருக்கம் இருப்பதாக புகார்கள் எழுந்தது. தற்போது அதன் தலைவர் ரஜினி கட்சியில் சேர இருக்கிறார். ராஜபக்சே மகனே நேரடியாக வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார். 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்று பல விஷயங்களை தொடர்பு படுத்தி சர்ச்சையாக பேசி வருகிறார்கள்.