பழையபடி 'கர்ஜிக்க' வேண்டும்.. குரல் வளம் வேண்டி ஓசைநாயகி அம்மன் கோயிலில் விஜயகாந்த் சிறப்பு வழிபாடு
Recommended Video
சென்னை: தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது பழைய குரல் வளம் வேண்டி சீர்காழியில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம். இங்கு குரல் பாதிப்பு உள்ளோர் மனமுருக வணங்கினால், அந்த பாதிப்பு நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுள்ளது. குறிப்பாக இங்கு வழங்கப்படும் தேன் பிரசாதத்தில் மகத்துவம் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினரோடு ஓசைநாயகி அம்மன் ஆலயத்தில், வழிபாடு நடத்தினார். குரல் வளம் வேண்டி அவர் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு விஜயகாந்த், தேன் பிரசாதம் சாப்பிட்டார்.
முன்னதாக கோவில் சார்பாக பரிவட்டம் கட்டி அவருக்கு மரியாதை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் மிக நீளமான வசனங்களையும் உச்ச ஸ்தாபியில் பேசி, இவரது டயலாக்குகளுக்காகவே தனி ரசிகர்களை சம்பாதித்தவர் விஜயகாந்த். அரசியலிலும் இவரது பேச்சு ஆளும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாகவே, விஜயகாந்த் தொண்டை பிரச்சினையால் அவதிப்பட்டு, பழையமாதிரி பேச முடியாமல் கஷ்டப்படுகிறார்.
ஒருபக்கம் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டாலும், மறுபக்கம், ஆன்மீக வழியில், தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியிலும் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார்.