ராம்குமார் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்டாரா? #Ramkumar
சென்னை: சுவாதி படுகொலையை விட ராம்குமார் மரணம் மிகப் பெரிய குழப்பமாக மாறியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொலை செய்தனரா என்ற பெரும் கேள்வியை அவரது வழக்கறிஞர்கள் சிலர் எழுப்பியுள்ளனர்.
ராம்குமார் புழல் சிறையில் தனி அறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அந்த பகுதியில் 24 மணி நேர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷிப்ட் முறையில் போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வந்தனர். அந்த அறையில் மின்கம்பியோ அல்லது வயரோ போவது போல தெரியவில்லை என்கிறார்கள். பொதுவாக எளிதில் பிடிக்கக் கூடிய வகையில் மின்சார வயரோ அல்லது கம்பியோ சிறைக்குள் இருக்க வாய்ப்பில்லை.
அதுவும் முக்கியமான கைதிகளை அடைத்து வைக்கும் இடத்தில் இப்படி இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் இன்று முழுவதும் ராம்குமார் வெளியே வரவே இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார். அதுவும் நேரடி பாதுகாப்பின் கீழ் இருந்த அவர் எப்படி வயரைக் கடித்திருக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன.
அவரை மின்சாரம் பாய்ச்சி யாரேனும் கொன்று விட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற சந்தேகத்தை அவரது வக்கீல்கள் எழுப்புகின்றனர். அதேபோல ராம்குமார் இருந்த அறையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றும் சக கைதிகள் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சுவாதி கொலைய விட ராம்குமார் மரணத்தில்தான் மிகப் பெரிய மர்மம் இருப்பதாகவும் வக்கீல்கள் கருதுகின்றனர்.