வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்விநியோகம் கட்!
நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் இருந்து நீர்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்: நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் இருந்து நீர்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி மூலமாக, 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும், இந்த ஏரியில் இருந்து, சென்னையின் குடிநீர் தேவைக்காகவும், தண்ணீர் அனுப்பப்படுகிறது.
வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் தற்போது 3 அடி வரையே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீரை விநியோகத்தை நிறுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனால் சென்னை, கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னரே வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கோடை உச்சத்தில் இருக்கும் போது என்னவாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் ஏரியில் நீர்மட்டம் குறைந்துள்ளது. வீராணம் ஏரி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பரவனாறில் இருந்து சென்னைக்கு நீர் விநியோகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.