மேட்டூர் அணையில் மளமளவென சரியும் நீர்மட்டம்… கவலையில் டெல்டா விவசாயிகள்
மேட்டூர்: கர்நாடகாவில் பருவமழை குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த, 12 நாட்களில், 10 அடி சரிந்துள்ளது, காவிரி டெல்டா விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தீவிரம் அடைந்த பருவமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 5,512 கனஅடியாக அதிகரித்தது. எனினும், நீர்வரத்தை விட, வெளியேற்றம் கூடுதலாக இருப்பதால், நேற்று நீர்மட்டம், 83.240 அடியாகவும், நீர் இருப்பு, 45.262 டி.எம்.சி.,யாக சரிந்தது. நீர்வரத்து சரிவால் கடந்த, 12 நாட்களில், 10 அடியும், நீர் இருப்பு, 11 டி.எம்.சி.,யும் குறைந்துள்ளது. காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர் மட்டம் 81.45 அடியாகவும் இருந்தது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,370 கன அடியாக இருந்தது தற்போது அணையில் நீர் இருப்பு 43.41 டி.எம்.சி.யாக உள்ளது.

கடந்த 28ம் தேதி, 93.560 அடியாகவும், நீர் இருப்பு, 56.958 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 15,000 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து வினாடிக்கு, 3,500 கனஅடிக்கும் கீழே குறைந்த நிலையில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
ஒகேனக்கல் கீழ்பகுதியில் காவிரியுடன், சின்னாறு, பாலாறு, தொப்பையாறு, நாகாவதி என, நான்கு துணையாறுகள் கலக்கிறது. இதில், காவிரியாற்றை தவிர மற்ற ஆறுகள் நீர்வரத்து இன்றி வறண்டு போனது. இதுவும் மேட்டூர் அணை நீர்வரத்து சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
குடிநீர் தேவை மற்றும் மீன் வளத்திற்காக அணையில் 10 டி.எம்.சி. நீர் இருப்பு வைத்திருக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி மீதமுள்ள நீரை 33 நாட்கள் மட்டுமே திறந்து விட முடியும். இதனால் நீர் திறப்பு காலமான ஜனவரி 28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications