மேட்டூர் அணையிலிருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு.. ஒகேனக்கல்லிலும் வெள்ளம்
Recommended Video
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு, 1.70 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனத்த மழையால், காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. நேற்று இரவு நீர் வரத்து அதிகரிப்பால், மேட்டூரிலிருந்து, 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின், 16 கண் மதகு கரையோரமுள்ள அண்ணாநகர், பெரியார் நகர் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய் துறை சார்பில் தண்டோரா போடப்பட்டது.
ஆனால் தாமதமாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பல பகுதியிலும் மக்கள் வசிப்பிடம் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வினாடிக்கு சுமார் 1.75 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து இருந்ததால், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. எனவே, நடைபாதை தொடர்ந்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று, 38வது நாளாக, ஆற்றில் குளிக்கவும், ஏழாவது நாளாக, பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்துள்ளது.