பழம் நழுவி பாலில் விழும் என்று பாஜக காத்திருக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பழம் நழுவி எப்போது பாலில் விழும் என்று பா.ஜ.க காத்திருக்கவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
சென்னை யானைக்கவுனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழிசை, தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இயலாமையால் அமைந்தது. 2 பெரிய கட்சிகளை வீழ்த்துவதற்காக கடந்த 2014ல் அமைத்ததுபோல், கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

2014 லோக்சபா தேர்தலில் அமைந்த கூட்டணி போல இப்போது கூட்டணி அமைக்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 2 கட்சிகளுக்கு மாற்றாக , மாற்றுச் சக்தியாக ஒரு முழுமையான மக்களுக்கு நலம் தரும் கூட்டணியாக அமைய வேண்டும் என்பது தான் நோக்கம். நிச்சயமாக பலம் பொருந்திய மாற்று சக்தியாக 2016 சட்டசபைத் தேர்தலை சந்திப்போம்.
ஒவ்வொரு கட்சியின் தலைவரின் பேச்சுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு தார்மீக உரிமையும், கடமையும் அனைத்து தலைவர்களுக்கும் இருக்கிறது என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறேன். அவரவர் தனித்தனியாக பிரிந்திருந்தால் இந்த மாபெறும் பிரச்சனையை எதிர்கொண்டு, 2 சக்திகளை எதிர்கொண்டு வெற்றிப் பெற முடியாது.
அதனால் இந்த நேரத்தில் யார் முதல்வர், யார் தலைமையில் கூட்டணி போன்ற பிரச்சனைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு, ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் வெற்றிப்பெற முடியும். கூட்டணிக்காக அழைப்பதால் நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. நாங்கள் பலம் பொருந்தியவர்களாகதான் இருக்கிறோம்.
பலம் பொருந்திய கட்சிகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். நாங்கள் 234 தொகுதிகளுக்கும் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 10க்கு மேற்பட்ட விருப்பமனுக்கள் வந்துள்ளது. இருந்தாலும் அனைவரும் இணைந்திருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பழம் நழுவி பாலில் விழும் என்று காத்திருக்க மாட்டோம் என்றும் கூட்டணி அமையாவிட்டாலும் தேர்தலை சந்திப்போம் என்றும் கூறியுள்ளார் தமிழிசை சவந்தராஜன்.












Click it and Unblock the Notifications