எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. முதல்வர் பழனிச்சாமி
ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவலர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
சென்னை: ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவலர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் காவலர் நிறைவாழ்வு பயிற்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ராஜேந்திரன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய டிஜிபி ராஜேந்திரன், பணி சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து திறமையாக பணியாற்ற காவலர் நிறைவாழ்வு விழா பெரிதும் உதவும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

ராணுவத்துக்கு இணையாக
அவர் பேசியதாவது, ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார். நமது காவல்துறை எல்லா காலங்களிலும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் நிலைநாட்டுவதிலும் சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை காவல்துறை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளது.

ஏச்சுக்கும் பேச்சுக்கும்
நீங்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நீங்கள் என் கடன் பணி செய்வதே என்ற ஆன்றோரின் வாக்குப்படி பணியாற்றுகிறீர்கள். தீவிரவாதிகளின் நடமாட்டத்தை காவல்துறையினர் தமிழகத்தில் முற்றிலும் முறியடித்துள்ளனர். தமிழகத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதனால்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.

மக்களுக்கு மரியாதை
காவலர் குடும்பங்களில் அமைதியான சூழல் ஏற்பட நிறைவாழ்வு பயிற்சி உதவும் என்றும் காவல்துறையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியிலும் உணவு உண்பதற்குக் கூட நேரமின்றி காவல்துறையினர் பணியாற்றுகின்றனர். காவல்துறையின் பணிகளால் சட்டத்தின் மீதும் அரசின் மீதும் மக்களுக்கு மரியாதை ஏற்படுகிறது.

உடல்நலனை பேணி காக்க வேண்டும்
காவல்துறையினரின் நலனைப் பேணி பாதுகாக்க தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் நிறைவாழ்வுப் பயிற்சி திட்டம். காவல்துறையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிறைவாழ்வுப் பயிற்சி அளிக்கப்படும். நிறைவாழ்வு பயிற்சிக்காக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காவல்துறையினர் தங்கள் உடல்நலனை பேணிப் பாதுகாக்க வேண்டும். உடற்பயிற்சி, புத்தகங்களை வாசித்தல் உள்ளிட்ட பழக்கங்களை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அன்பு தொல்லைக்கு
தீய ஆதிக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு இடம் கொடுத்து கூடாது. இந்த நிறைவாழ்வுப் பயிற்சியின் மூலமாக காவல்துறையினர், அவர்களது குடும்பத்தினரின் மனநலன் பேணப்பட்டு சிறப்பாக பணியாற்ற வழிவகுக்கும்' இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினர் மத்தியில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications