மனசாட்சிப்படிதான் தீர்ப்பு:ஆண்டவனுக்கு மட்டுமே பதில்சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.. இந்திரா பானர்ஜி பொளேர்
மனசாட்சிப்படி தீர்ப்பு அளிப்பதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மனசாட்சிப்படி தீர்ப்பு அளிப்பதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டது.
11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்திருந்தார். தீர்ப்பு விலை கொடுத்து வாங்கப்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியிருந்தார்.
நம்பிக்கை போயிவிடும்
இதனைத் தொடர்ந்து இன்று காலை தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி முன்பு தங்க தமிழ்ச்செல்வனின் விமர்சனம் குறித்து வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் முறையிட்டார். மேலும் தங்க தமிழ்ச்செல்வனின் இத்தகைய விமர்சனம் மக்கள் மத்தியில் நீதித்துறை மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும் எனவே இதுபோன்ற விமர்சனங்கள் தெரிவிப்பதை ஆரம்பத்திலேயே கிள்ளி விடாவிட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் போய்விடும் என்றும் தெரிவித்தார்.
தெரிந்த ஒன்றே
மேலும் இத்தகைய விமர்சனங்களை தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூர்ய பிரகாசம் முறையிட்டார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும் போது பலதரப்பட்ட விமர்சனங்கள் வரும் என்பது நாங்கள் தெரிந்த ஒன்றே என்றார்.
நாங்கள் கவலைப்படவில்லை
அது மட்டுமல்லாமல் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பானது தங்களுடைய மனசாட்சிக்கு விரோதமாக வழங்கவில்லை என்பது அந்த கடவுளுக்கு தெரியும் என்று தெரிவித்த நீதிபதி, தீர்ப்பு குறித்த எவ்வித விமர்சனங்களுக்கும் நாங்கள் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.
அவமதிப்பு மனு
இதையடுத்து தமிழகம் அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலமாக விளங்கி வரும் சூழ்நிலையிலேயே அரசியல் ஆதாயத்திற்காகவே ஒருசிலர் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சனம் செய்கிறார்கள் என்றும் அவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்வதோ, நடவடிக்கை எடுப்பதோ நாங்கள் செய்ய போவதில்லை, வேண்டுமானால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தால் நீதிமன்ற விடுமுறை நாட்களுக்கு பிறகு ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
ஆண்டவனுக்கு மட்டுமே பதில்
மனசாட்சிப்படி தீர்ப்பு அளிப்பதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில்சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கூற அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் வழக்கின் தன்மையை பொறுத்துதான் முழுமனதுடன் விசாரித்து சட்டத்துக்குட்பட்டு தீர்ப்பளிக்கிறோம் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.