சட்டசபை தேர்தலை எப்போ நடத்தினாலும் சந்திக்க தயார்... சொல்கிறார் இளங்கோவன்
திருப்பூர்: தமிழகத்தில் எந்த நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பல்லடத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், இதனை கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுங்கட்சியினரே தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எப்போது நடத்தினாலும் அதனை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் உரிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மை துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை என்று கூறினார்.
இது போதுமானதல்ல. இவ்வழக்கில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சி.பி.ஐ.யால் மட்டுமே முடியும் என்பதால் இவ்வழக்கை அந்த அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications