அதிமுகவை காப்பாற்றவே ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளோம்.. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேட்டி
அ.இ.அ.தி.மு.கவை காப்பாற்றவே புதுச்சேரி ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி: அ.இ.அ.தி.மு.கவை முழுமையாக கைப்பற்றி, கட்சியை காப்பாற்றவே புதுச்சேரி ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை, பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு ஆகியோர் கூறுகையில், "தற்போது கட்சி எங்களிடம் இருக்கிறது. ஆட்சி அவர்களிடம் இருக்கிறது.
கட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்து தங்கி இருக்கிறோம்.
எங்கள் தொகுதி மக்கள் எங்களுக்கு முழு ஆதரவு தருகிறார்கள். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீங்கள் அங்கேயே தங்கி இருங்கள் என்று எங்களிடம் கூறுகிறார்கள். நல்லாட்சி நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
எனவே, இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம். நாங்கள் இங்கு சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த மனக்குறைவும் இல்லை.
தினகரனுக்கு ஆதரவாக இப்போது ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதாவது இன்னும் பல மடங்கு ஆதரவு எங்கள் அணிக்கு வரப்போகிறது. இன்று 8 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்கு வருகிறார்கள். அவர்களும் புதுவை வருவார்கள். இதை தொடர்ந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் சேருவார்கள்." என்று அவர்கள் தெரிவித்தனர்.