கருத்துக் கணிப்புகளை நம்பினால் அரசியலே செய்ய முடியாது - மு.க. ஸ்டாலின்
சென்னை: தேர்தல் கால கருத்து கணிப்பை நம்பியெல்லாம் அரசியல் செய்ய முடியாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. அதன் முடிவுகள் மக்களிடையே விவாதப் பொருளாகியுள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "சட்டசபை ஜெயலலிதாவுக்கு புகழ்பாடி அர்ச்சணை செய்யும் இடமாக உள்ளது. 110 விதியின் கீழ் பல்வேறு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திட்டப்பணி, சூழ்நிலை குறித்தும் வெள்ளை அறிக்கை சமர்க்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் அதிமுக அதை சமர்ப்பிக்கவேயில்லை.
தேர்தலுக்கு முன் வரும் கருத்துக்கணிப்பு சாதகமாகவும், பாதகமாகவும் வரும். இந்தக் கருத்து கணிப்பை நம்பி அரசியல் செய்ய முடியாது" என்று தெரிவித்தார் அவர்.