அதிமுக ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம் - ஸ்டாலின்
ஆளும் தகுதியை இழந்து விட்ட அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை: அதிமுக அரசு ஆளும் தகுதியை இழந்து விட்ட அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பண பேரம் நடத்தப்பட்டற்கான ஆதாரத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. இதனை ஆதாரமாக வைத்து கொண்டு பண பேரம் விவாகரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான திமுக வலியுறுத்தியது.
சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப் போவதாக ஸ்டாலின் கூறியிருந்தார். நேற்று மாலை சபாநாயகரிடம் வீடியோ ஆதாரத்தின் சிடியை அளித்தார் ஸ்டாலின்.
இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறையிட்ட ஸ்டாலின், மனு ஒன்றையும் அளித்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை மனுவை அளித்த ஸ்டாலின், ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், பிப்ரவரி 18ஆம் தேதியன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது நாங்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரினோம். ஆனால் அதற்கு மறுத்து விட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
எங்களை அடித்து காயப்படுத்தி வெளியில் தூக்கிப் போட்டனர். அன்றைய தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் அப்போதே மனு கொடுத்தோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.
எம்எல்ஏக்கள் கோடி கோடியாக பணம் பெற்றதாக எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ டைம்ஸ் நவ் டிவியில் ஒளிபரப்பானது. அதை சட்டசபையில் விவாதிக்க கேட்டோம். ஆனால் ஆதாரம் இல்லாமல் பேச முடியாது என்று சபாநாயகர் கூறி விட்டார். நாங்கள் பேசியதையும் அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டார்.
எனவே வீடியோ ஆதாரம் அடங்கி சிடியை சபாநாயகரின் அறையில் கொண்டு போய் கொடுத்தோம். திங்கட்கிழமை சட்டசபை நடைபெறும் போது அது குறித்து விவாதம் நடத்த அனுமதிப்பார் என்று நம்புகிறோம். இன்றைய தினம் ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அதில் வீடியோ ஆதாரத்தையும் அளித்திருக்கிறோம்.