ஜெ.வுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது என நல்லெண்ணத்தில் சசிகலா குடும்பம் சொன்னதை ஏற்றோம்- ஓபிஎஸ்
ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நாங்கள் அவரை பார்க்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டு மேலும் பாதிக்கக் கூடாது என்பதால் சசிகலா குடும்பத்தினர் என்ன சொன்னார்களோ அந்த தகவலை கேட்டுக் கொண்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஆர்கே நகர் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேரை நீக்கிவிட்டு செய்தியாளர்களை முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்தனர்,.
அப்போது துணை முதல்வரிடம் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் ஜெயலலிதா மீது பாசம் இருந்திருந்தால் இதுபோல் அவர் சிகிச்சை பெறுவதாக கூறும் வீடியோவை வெளியிட்டிருக்க மாட்டார்கள்.
அதுபோல் இந்த வீடியோ குறித்து அமைச்சர்களுக்கு தெரியும் என்று தினகரன் கூறுவது சுத்த பொய். நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை.
அவரை பார்த்தால் நோய் தொற்று ஏற்படும் என்றார்கள், அதுபோல் நாங்கள் பார்த்து ஜெயலலிதா நோய் தொற்றால் பாதிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நாங்கள் யாரும் பார்க்கவில்லை.
உள்ளே நடப்பதை சசிகலா குடும்பத்தினர் எங்களுக்கு தெரியப்படுத்தினர். அதை நாங்கள் கேட்டுக் கொண்டோம் என்றார் ஓபிஎஸ்.