ஆளுநர் மீது சந்தேகமில்லை.... இன்று பதவியேற்பு என்று நாங்கள் சொல்லவில்லை - அதிமுக நிர்வாகிகள்
ஆளுநர் மீது எந்த சந்தேகமும் இல்லை, அவரிடம் இருந்து தகவல் வந்த உடன் பதவியேற்பு நடைபெறும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: எந்த நேரத்தில் யாரை முதல்வராக்க வேண்டும் என்பது அதிமுகவின் கட்சி கொள்கை முடிவு என்று பன்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆளுநரிடம் இருந்து தகவல் வந்த உடன் பதவியேற்பு நடைபெறும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் போர்கொடி உயர்த்தியுள்ளனர். முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறினார். சசிகலா முதல்வராவதை மக்கள் விரும்பவில்லை என்றும் கூறினார்.

அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை சசிகலாவிற்கு எதிராக அடுக்கினார் பி.எச். பாண்டியன். இதற்கு பதிலடி தரும் விதமாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பண்ருட்டி ராமசந்திரன், செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பலர் வேண்டுமென்ற வதந்திகளை பரப்புகின்றனர். தங்கள் குறைகளை கட்சி பொதுக்குழுவில் பி.எச்.பாண்டியன் கூறியிருக்கலாம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், அதிமுகவிற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதவர் பி.எச். பாண்டியன் என்று கூறினார். 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன் என செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், யாரை எந்த நேரத்தில் முதல்வராக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை முடிவு என்று கூறினர். ஓ.பன்னீர் செல்வம்தான் சசிகலாவின் பெயரை முன் மொழிந்தவர் என்றும் கூறினார். சசிகலா முதல்வராக இன்று பதவியேற்பார் என்று கட்சி சார்பாக நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேயில்லை என்றும் கூறினார். ஆளுநர் மீது சந்தேகமில்லை என்றும், ஆளுநரிடம் இருந்து தகவல் வந்த உடன் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் கூறினர்.












Click it and Unblock the Notifications