என்ன விளையாடுறான்னே தெரியாதுங்க... ப்ளூவேலிற்கு பலியான விக்னேஷின் அப்பாவி பெற்றோர் கதறல்!
விக்னேஷ் செல்போனில் என்ன விளையாடினான் என்றே தெரியாது, தெரிந்திருந்தால் முன்பே தவிர்த்திருப்போம் என்று ப்ளூவேல் விளையாட்டிற்கு பலியான விக்னேஷின் பெற்றோர் கதறியுள்ளனர்.
Recommended Video
மதுரை : கடந்த இரண்டு நாட்களாக செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் போனில் என்ன விளையாடினான் என்றே தெரியாது, என அவருடைய பெற்றோர் கதறியுள்ளனர்.
ப்ளூவேல் இளைஞர்களை காவு வாங்கும் ஆன்லைன் விளையாட்டிற்கு மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் விக்னேஷ் உயிரிழந்துள்ளான். அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம், பெற்றோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த விக்னேஷ் என்ன விளையாடுகிறான் என்பது கூட தெரியாத அளவிற்கு மாணவனின் பெற்றோர் படிப்பறிவில்லாதவராக இருக்கிறார். மிக்சர் கடையில் வேலை செய்யும் விக்னேஷின் தந்தை, "எனக்கு செல்போன் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவன் கல்லூரியில் படிப்பதால் செல்போன் பயன்படுத்தி வந்தான். எனக்கு இதை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
அப்பாவி கூலித் தொழிலாளி
"எப்போது பார்த்தாலும் என்னுடைய மகன் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். என்னடா இப்படி போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்டேன், அதற்கு கேம் விளையாடுகிறேன் என்று சொன்னான். இப்போது இந்த விளையாட்டு அவனுடைய உயிரையே காவு வாங்கிவிட்டது. இந்த விளையாட்டிற்கு பலியான கடைசி பையன் என் மகனாகத் தான் இருக்க வேண்டும் என்று கதறுகிறார் விக்னேஷின் தாயார்.
சகோதரன்
என்னுடைய தம்பி தான் விக்னேஷ், எப்போதும் ஃபோனில் விளையாடிக் கொண்டிருந்தான். என்ன விளையாடுகிறாய் நானும் விளையாடுகிறேன் என்று கேட்ட போது அவன் தரவில்லை. இந்த கேம் விளையாடிக் கொண்டிருந்த போது அவனுடைய செல்போனுக்கு அடுத்தடுத்து எஸ்எம்எஸ்கள் வந்து கொண்டிருந்தன.
மூளையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் ப்ளூவேல்
திடீர் திடீரென எங்காவது ஒரு மூலையில் போய் நின்று கொண்டிருப்பான், மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் போய் நின்று கொண்டிருப்பான். அவனுடைய அறையில் இருந்து அடிக்கடி காணாமல் போய்விடுவான். ஒரு கட்டத்தில் யார் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு அவனுடைய மூளை முழுவதும் அந்த விளையாட்டின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது.
நடந்தது எப்படி?
நேற்று முழுவதும் ஏதோ சிந்தனையில் இருந்து கொண்டிருந்தான். நான் சொல்வதை கேட்கும் மனநிலை அவனிடம் இல்லை. சரி காலையில் என்ன ஏதென்று கேட்கலாம் என நினைத்திருந்தேன், ஆனால் அதற்குள்ளாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று விக்னேஷின் சகோதரர் நடந்த சம்பவங்களை விவரிக்கிறார்.