என்னமோ நாங்க கூப்பிட்டு பிரதமர் வராதது மாதிரியே பேசுறீங்களே ஸ்டாலின்.. அமைச்சர் தாக்கு
சென்னை: ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. எனினும் நாங்கள் அழைத்து ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோர் வராதது போல் திமுக செயல்தலைவர் பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்று திமுக, பாமக, தேமுதிக , காங்கிரஸ், இடதுசாரிகள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் ஆகியோரை அழைத்தும் ஜெயலலிதா குற்றவாளி என்பதால்தான் அவர்கள் வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதுபோல் போக்குவரத்து துறையை லாபத்தில் இயங்க வைக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவை திமுக அண்மையில் நியமித்தது. அந்த குழுவின் அறிக்கையை நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து கொடுத்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் தமிழகம் எப்போதும் பெரியார் பூமியாகவே இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். முதல்வரை சந்தித்த பின் அதிமுக அரசு செயல்படாத அரசு என்று குறை கூறுவது கண்டனத்துக்குரியது.
ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு யாரையும் அழைக்கவில்லை. நாங்கள் அழைத்து ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் ஆகியோர் வராதது போல் ஸ்டாலின் பேசுகிறார். யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்கக் கூடாது என்பது எங்களுக்கு தெரியும், ஸ்டாலின் பாடம் எடுக்கத் தேவையில்லை என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications