அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன்தான்... 29 எம்எல்ஏக்கள் ஆதரவு - வி.பி கலைராஜன்
டிடிவி தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளராக நீடிப்பதாகவும், அவருக்கு 29 எம்எல்ஏக்கள் ஆதரவு தருவதாகவும் வி.பி கலைராஜன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நீடிக்கிறார் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அக்கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வி.பி கலைராஜன் கூறியுள்ளார்.
இரட்டை இல்லை சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்திருக்கும் டிடிவி தினகரனால் மீண்டும் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சிறைக்கு செல்வதற்கு முன்பு அதிமுகவில் இருந்து நான் ஒதுங்கியே இருப்பேன் என்று தெரிவித்து இருந்த தினகரன், சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அரசியலில் ஈடுபடுவேன்.
அதிமுகவை காப்பாற்றுவதுதான் என்னுடைய கடமை. என்னை நீக்குவதற்கு கட்சியின் பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. யாருக்கும் இல்லை என்று அதிரடியாக தெரிவித்தார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். இதனையடுத்து பேட்டி கொடுத்த அவர், எதோ சில காரணங்களால் அமைச்சர்கள் சிலர் என்னைப் பார்த்து பயப்படுகின்றனர். இன்னும் 60 நாட்களுக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்று பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். அப்போதும் கட்சி ஒன்றுபடாவிட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த சூழ்நிலையில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர்வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அவரது வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட நிர்வாகிகளும் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ வி.பி கலைராஜன், தினகரனுக்கு 29 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக கூறினார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் என்பதால் தினகரனுடன் சந்தித்து பேசியதாகவும், சிறையில் இருந்து விடுதலையானதால் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தினகரனுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார். டிடிவி தினகரனே துணை பொதுச்செயலாளராக நீடிக்கிறார் என்றும் வி.பி கலைராஜன் கூறியுள்ளார்.