அமாவாசை முடிந்தது... பவுர்ணமி தொடங்கியது.. இளங்கோவன் பேச்சு!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக 2வது முறையாக பதவியேற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸில் சோனியா கோஷ்டி என்ற ஒன்று மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று இளங்கோவன் பதவியேற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் இளங்கோவன்.
நம்பிக்கையைக் காப்பேன்
அப்போது அவர் பேசுகையில், தொண்டர்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல், அவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப செயல்படுவேன்.
காமராஜர், சோனியா, ராகுல் வழியில்
பெருந்தலைவர் காமராஜரின் வழியில் அன்னை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் கடுமையாக முயற்சி செய்து காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்.
அமாவாசை - பவுர்ணமி
அமாவாசை முடிந்து பவுர்ணமி தொடக்க நாள் போல் உள்ளது. காங்கிரசின் சக்கரம் தற்போது கீழே உள்ளது.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் அதனை மேலே கொண்ட வருவது தான் எனது வேலை. அதனை செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
வேலை வாய்ப்பு இல்லை
1967-க்கு பிறகு நாம் ஆட்சியை பிடிக்க முடியாததால் மக்கள் துன்பப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக வேறுவிதமான வேலை வாய்ப்பை கொடுக்கிறார்கள்.
மொட்டை போட்டால்.. மீசை எடுத்தால்
மொட்டை போட்டால் ரூ.550, மீசை எடுத்தால் ரூ.100, பூஜை நடத்தினால் ரூ. 5 ஆயிரம், உண்ணாவிரதம் இருந்தால் ரூ.500, அதை முடிப்பதற்கு பிரியாணி என்று பல விதங்களில் வேலை கொடுத்து வருகிறார்கள். நமக்கு அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.
எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்
என்னை தலைவராக நியமித்த சோனியா மற்றும் ராகுலின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவேன். காமராஜருக்கு நிகரான தலைவர்கள் இல்லை. அவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்பதால் தான் இன்றும் அவரை கொண்டாடுகிறோம்.
உத்தம தலைமை
இப்படிப்பட்ட உத்தம தலைமை வேறு எந்த கட்சிக்கும் இருந்தது கிடையாது. இன்று சிலர் எள்ளி நகையாடலாம். சத்தம் போட்டு பேசலாம்.
பேசிப் பேசியே
பேசி... பேசியே ஆட்சியை பிடித்தவர்கள்தான் திராவிட கட்சியினர். எவ்வளவோ பெரிய பேச்சாளர்களான முசோலினி, ஹிட்லர் முடிவுகள் என்ன என்பதை வரலாறு சொல்கிறது.
மோடி சாயம் வெளுக்கும்
இப்போது பேசி... பேசியே டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள மோடியின் சாயம் விரைவில் வெளுக்கும்.
சோனியா கோஷ்டி மட்டுமே
என்னை பொறுத்தவரை கோஷ்டி அரசியலில் நான் நம்பிக்கையில்லாதவன். காங்கிரசில் அத்தனை பேரும் ஒரே கோஷ்டிதான். இந்த கோஷ்டிக்கு தலைவர் சோனியாகாந்தி.
மீண்டும் கதர்ச் சட்டை ஆட்சி
தமிழ்நாட்டின் முகவரி காமராஜர். மீண்டும் கதர் சட்டை போட்டவர்கள் நாட்டை ஆள வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதை செய்து முடிக்க நான் தயார் என்றார் இளங்கோவன்