'நோ' நிர்வாண மசாஜ்-சிலரது அரசியல் லாபத்துக்காகவே சசிகலா புஷ்பா மீது புகார்- பணிப்பெண்களின் பரபர மனு
சிலரது அரசியல் லாபங்களுக்காக சசிகலா புஷ்பா மீது பொய் புகார் கொடுத்ததாக அவரது வீட்டு பணிப் பெண்கள் போலீசில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தவறான சில நபர்களின் அரசியல் லாபங்களுக்காகவே ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்தோம் என அவரது வீட்டு பணிப்பெண்கள் பானுமதி மற்றும் ஜான்சி ராணி ஆகியோர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா தாக்கிய சம்பவம் தொடர்பாக போயஸ் கார்டன் பங்களாவில் விசாரணை நடத்தப்படது. இந்த விசாரணையின் போது தாம் தாக்கப்பட்டேன் என ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா எம்.பி. கூறியிருந்தார்.
அப்போது ஜெயலலிதா மீது புகார் கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை புகார்
இதையடுத்து திடீரென சசிகலா புஷ்பாவின் வீட்டு பணிப் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி இருவரும் தூத்துக்குடி போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மறுத்த சசிகலா புஷ்பா
ஆனால் இந்த புகாரை திட்டவட்டமாகவே சசிகலா புஷ்பா மறுத்துவந்தார். இதனால் ஜாமீன் பெற சசிகலா புஷ்பா நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் திடீரென தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு பானுமதியும் ஜான்சிராணியும் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் 'அரசியல் லாபங்களுக்காக சில தவறான நபர்களின் தூண்டுதலால்' சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்தோம் என தெரிவித்துள்ளனர்.
நல்லபடியாகவே இருந்தோம்
மேலும் தங்களது புகாரை வாபஸ் பெற விரும்புவதாகவும் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் சசிகலா புஷ்பாவின் வீட்டில் தாங்கள் நல்ல படியாக இருந்தோம் என்றும் எந்த பாலியல் தொல்லையும் தரவே இல்லை எனவும் பானுமதியும் ஜான்சிராணியும் தெரிவித்துள்ளனர்.
உண்மையை உடைப்பார் சசிகலா புஷ்பா?
தம் மீது பொய் வழக்கு போட யார் தூண்டிவிட்டது என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்தப் போகிறார் சசிகலா புஷ்பா. இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.