எந்த நேரத்திலும் எங்களை கைது செய்யலாம்.. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
நாகர்கோவில்: நாங்கள் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னாள் சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜ் மகனின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் வந்திருந்தார். நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற திருமணத்தை, தன் கையால் தாலியை எடுத்துக் கொடுத்து மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கு உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின். மனோதங்கராஜ் வந்துள்ளோம் என்று கூறினால் கூட இன்று காலையில் எங்கள் மீது 143, 188 பிரிவுகளில் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளது. நானும் திருமணத்திற்கு வருவோமா? வரும் வழியில் கைது செய்யப்படுவோமா, என்ற சந்தேகம் இருந்தது. பேசிவிட்டு வெளியே செல்லும்போது கூட கைது செய்யப்படலாம், அந்த நிலையில் நாங்கள் வந்துள்ளோம். ஆனால் நல்ல வேளையாக இங்கு காவல்துறையினர் வரவில்லை. காவல்துறையும், இந்த அரசும் இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் நிலையில் எங்களை விட்டுவைத்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக நாங்கள் சட்டமன்றத்தில் உள்ளே செல்ல முடியாத நிலையில் சட்டபேரவை நடத்தக்கூடிய சபாநாயகர் தீர்ப்பு தந்துள்ளார். இந்த நிலையில் சட்டமன்றம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள, புரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் மாதிரி சட்டமன்றம் நாங்கள் 2 நாட்கள் சட்டமன்ற வளாகத்தில் வெளியில் உட்கார்ந்து நடத்தினோம். இது உங்களுக்கு தெரியும், ஏன் அவ்வாறு செய்தோம் என்றால் இங்குள்ள சபாநாயகர் சர்வாதிகார போக்குடன் நடந்தார்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் காவல்துறை மானிய கோரிக்கை நடக்க இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பற்றி கேள்வி கேட்போம் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலை வரும் என்று எண்ணி திட்டமிட்டு, சதி செய்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து வெளியேற்றியுள்ளனர். நாங்கள் சட்டமன்றத்தில் இல்லை என்றாலும், திமுகவினருக்கு மக்கள் மன்றம் உள்ளது, மக்கள் மன்றத்தை திமுக சந்திக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications