இப்ப வரைக்கும் அதிமுக கூட்டணிதான்.. தேர்தலில் அதிக இடங்களை கேட்போம்: சொல்வது சரத்
ஈரோடு: சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்வோம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம் என்று கூறியுள்ள சரத்குமார், ச.ம.க இடம்பெறும் கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப்பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
'மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு' என்ற பெயரில் கொங்கு மண்டலத்தில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவினாசி வந்த சரத்குமாருக்கு, பட்டாசு வெடித்து, மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சரத்குமார் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அவினாசி மேற்கு ரதவீதியில் மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார். திறந்த வேனில் நின்ற படி மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், மக்களுக்கு என்ன தேவை என்பதை அறியும் அடிப்படையில் உங்களை சந்திக்க வந்து உள்ளேன். திரைத்துறையில் மக்களை பல வழிகளில் சந்தித்து இருந்தாலும், இப்போது நேரில் சந்திக்க வந்து உள்ளேன். இளைஞர்கள் நன்கு படித்து கல்வி, வேலை வாய்ப்பில் உயர்வு பெற்று நாட்டை முன்னேற்ற வேண்டும்.
அவினாசி- அத்திக்கடவு திட்டம் என்பது இந்த பகுதிக்கு மிகவும் இன்றியமையாதது. இத்திட்டம் நிறைவேற வேண்டி கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, மேட்டுப்பாளையத்தில் இருந்து பெருந்துறை வரை இருசக்கர வாகன பேரணி நடத்தியுள்ளோம். மழை காலங்களில் 52 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது. அதில் 2 டி.எம்.சி. தண்ணீர் தான் இப்பகுதிக்கு தேவைப்படுகிறது. ஆகவே இத்திட்டம் செயல்படுத்த நான் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை 10 நாட்களில் வெளியிடப்படும் என்றும் சரத்குமார் கூறினார்.
தொடர்ந்து அவினாசி புதிய பஸ் நிலையம் பகுதியில் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருபவர்களை சந்தித்து சரத்குமார் ஆதரவு தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
60 ஆண்டு கால அத்திக்கடவு பிரச்சினையை பல்வேறு அரசியல் கட்சிகளும், பல அமைப்புகளும் நிறைவேற்ற கோரி குரல் கொடுத்து வருகிறது. இத்திட்டம் நிறைவேறுவதற்காக நாங்கள் 125 கிலோ மீட்டர் தூரம் வாகன பிரசாரம் மேற்கொண்டோம். விவசாயம் தான் மிக முக்கியம். இந்தியாவில் இது மிகவும் பெரிய தொழில். விவசாயம் உயரும் போது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயரும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு இளைஞராவது விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் விவசாயத்தில் பக்க பலமாக இருக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற அரசு தீவிர கவனம் செலுத்தி இந்த கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்த திட்டம் நிறைவேற நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று கூறினார்.
தொடர்ந்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், சட்டசபை தேர்தலில் ச.ம.க யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யும் என என்று கூறினார். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம் என சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ச.ம.க இடம்பெறும் கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப்பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications