கூட்டணியில் நீடிக்கிறோமா? இல்லையா என்பதை அதிமுக தெளிவுபடுத்த வேண்டும்- வேல்முருகன் காட்டம்
சென்னை: அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடிக்கிறதா? இல்லையா? என்பதை அதிமுகதான் தெளிவுபடுத்த வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 7 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. இதில் அதிமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக்கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்றவற்றுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் வேல்முருகன் கேட்டிருந்த 3 தொகுதிகளில் டம்மி வேட்பாளர்கள் போடப்பட்டுள்ளனர். ஆகையால் வேல்முருகன் கட்சிக்கு அதிகபட்சம் 3 தொகுதிகளுக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பேசிய வேல்முருகன், அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி நடைபெற்றது என்பதை விவரித்தார். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று பேச்சுவார்த்தைக் குழுவிடம் வலியுறுத்தியதையும் முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக அக்குழு கூறியதையும் வேல்முருகன் சுட்டிக்காட்டினார்.
இப்படி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது; பேச்சுவார்த்தைக்கான கதவை அதிமுக சாத்திவிட்டது; நாங்கள் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்; பல அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார்கள்; கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி இறுதி முடிவெடுக்கும் என்று கூறிய அவர், அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பதை எழுதித் தருமாறு நிர்வாகிகளிடம் கேட்டார். அதாவது அதிமுக கூட்டணியில் நீடிப்பதா? தனித்துப் போட்டியா? திமுக கூட்டணிக்கு போவதா? என்பது தொடர்பான நிர்வாகிகளின் கருத்துகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுங்கள் என்றும் அதன்பின்னர் நல்ல முடிவை எடுப்போம் என்றும் வேல்முருகன் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், அதிமுகவுடனான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடிக்கிறதா? இல்லையா? என்பதை அதிமுகதான் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால் என்ன காரணங்களுக்காக இடம்பெறவில்லை என்பதையும் அதிமுகதான் கூற வேண்டும்.
கடைசியாக நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது அதிமுக அமைச்சர்கள் குழு கேட்டுக் கொண்டதற்கேற்ப ஒரு வேண்டுகோள் கடிதம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதம் முதல்வர் பார்வைக்கு சென்றதா? இல்லையா? என்பது தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் ஜாதிய ரீதியாக கட்சியை நான் நடத்தவில்லை; தமிழர் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்துதான் கட்சியை நடத்தி வருகிறேன்.
திமுக கூட்டணியில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றனர். அதிமுக கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது எந்த ஒரு கட்சியிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணிக்கு விசுவாசமாகத்தான் நாங்கள் இருந்தோம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications