அலங்காநல்லூர், பாலமேட்டில் என் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு: சீமான்
அலங்காநல்லூர், பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசிடம் கெஞ்ச மாட்டோம் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் தமது தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த யாரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம். களத்தில் இறங்கித்தான் சில உரிமைகளை பெற முடியும்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் கேட்க மாட்டோம். அலங்காநல்லூர், பாலமேட்டில் தடையை மீறி என் தலைமையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவேன்.
அப்போது என்னை கைது செய்வதாக இருந்தால் கைது செய்யுங்கள்.. கவலைப்படமாட்டேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications